திருவண்ணாமலை. அக்.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இந்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட ) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவ / மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.11.2021 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 30.11.2021 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பக்கலாம். இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.