திருவள்ளூர், ஜூன். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…

திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று முதல் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை உடனடியாக கைது செய்யும் நோக்கில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்ட நிலையில்,

திடீரென அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர்  மேடை அமைக்க கூடாது எனவும் மேலும் அமர்வதற்கு இருக்கைகள் போடக்கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைக்கு வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து மாவட்ட காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, மூர்த்தி, முன்னாள்  உறுப்பினர்கள் வேணுகோபால், திருத்தணி கோ ஹரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள வந்த நிலையில் திடீரென கண்டெய்னர் லாரியை அதிமுகவினர் மேடையாக பயன்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது,

கண்டைனர் லாரியை மேடையாக பயன்படுத்தக் கூடாது என லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்துக் கொண்டனர். அதனால் முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின், மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

பின்னர் ஒரு வழியாக காவல் துறையினரின் எதிர்ப்பையும் மீறி அதிமுகவினர் கண்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

அப்போது தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும் எதிராக அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறிய திமுக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மேடைக்கு பதிலாக கண்டெய்னர் லாரியை பயன்படுத்த முயன்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு பின்னர் லாரின் மீது ஏறி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் என ஒரு வழியாக திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பாக முடிந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here