கும்பகோணம், ஜன. 04 –
கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41) இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். எனவும் மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது.
மேலும், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் கொடுத்து சேர்த்து வைக்க சொல்லியுள்ளார். மேலும் அவருக்கு நத்தம் கிராமத்தில் சொந்த வீடும் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய செந்தாமரை, தனது சொந்தக்காரர்களிடம் கொடுத்த பணத்தையும், வீட்டையும் கேட்டுள்ளார். ஆனால் உறவினர்கள் வீட்டை அபகரித்துக் கொண்டும், அனுப்பிய பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த செந்தாமரை மேற்கு தாலுகா காவல் நிலையத்தில் வீட்டையும், பணத்தையும் பெற்றுத்தரக்கூறி புகார் மனு அளித்துள்ளார். மேலும் இப்புகார் தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.
காவல்துறையினர் இப்புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத தாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீதிமன்றம் வந்துள்ளார். தகவலயறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் நீதிமன்றம் முன்பு நின்று கொண்டிருந்த செந்தாமரையை விசாரித்துள்ளனர், அப்போது செந்தாமரைக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆவேசமடைந்த செந்தாமரை சாலையில் நடுவில் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு காவல் துறையிடம் தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து பெண் காவலர்களை தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் காவல்துறையினர், குண்டு கட்டாக செந்தாமரையை தூக்கிக் கொண்டு காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் நீதிமன்றம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் சோழபுரம் காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு வழக்கு பணிக்காக வந்த மகளிர் காவலர் செந்தாமரையை சமாதானம் செய்து சாலையை விட்டு ஓரமாக வரக்கூறி அழைத்தனர். ஆனால் செந்தாமரை திடீரென மகளிர் காவலரை பிடித்து தள்ளி விட்டும், சட்டையை பிடித்து இழுத்தும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதியை, செந்தாமரை கழுத்தை நெரித்து பலமாக தாக்கியதால் உதவி ஆய்வாளர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செந்தாமரை அடிக்கடி உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு நியாயம் வேண்டும் என்று பேசிக் கொண்டும், முன்னுக்கு பின் முரணாக தகாத வார்த்தைகள் பேசுவார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
























