பொன்னேரி, மார்ச். 28 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஏனைய அடையாள அட்டைகளை வழங்கியபோதும் ஒரு நூற்றாண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு இதுவரை நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு மனை பட்டா வழங்காது, அரசு தாங்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அப்பகுதி மக்கள் தங்கள் மனக் குமுறலுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர்.
மேலும் இதுக்குறித்து, அரசு துறை அதிகாரிகளிடம் இதுவரை பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசியல் வாதிகளின் தேர்தல் வாக்குறுதி போல் அவர்கள் அளித்திடும் செய்திடுவோம் என்ற வாக்குறுதிகளும் அவ்வாறே உள்ளது என்கின்றனர் அப்பகுதி வாழ் வாசிகள்,
மேலும், இதுக்குறித்து தொடர்ந்து மனுவளிப்பதையே ஒரு போராட்டமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்பகுதிமக்கள் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அம்மனுவினைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் இதுக்குறித்து விரைவாக ஆய்வு நடத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக அம்மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார் ….