பொன்னேரி, செப். 08 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட் டி துறைமுகம், அதானி துறைமுகம், அனல் மின் நிலைய நான்காவது அலகு, என்.டி.சி.எல் மற்றும் கொண்டக்கரையில் பல்வேறு தொழிற்சாலைகள், மணலி புதுநகர் முதல் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு தினசரி பல்வேறு கண்டெய்னர்களும் தொழில் நிறுவனங்களுக்கு தினசரி செல்லும் கனரக வாகனங்கள் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தச்சூர் கூட்டுச்சாலை வழியாக திருவொற்றியூருக்கும் வல்லூர், காட்டுப்பள்ளி வழியாக எண்ணூருக்கும் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் காலை வேளைகளில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை செல்வதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து வருவாய் துறை சார்பிலும் காவல்துறை சார்பிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளாமல் மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க வழிகளில் இந்த கனரக வாகனங்கள் செல்வதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர் எனவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அ.இ.அ.தி.மு.க திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மெரட்டூர் திருமுருகன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் பொன்னேரி கோட்டாச்சியரிடம் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி மனு கொடுத்தனர்.
























