சென்னை, மார்ச். 31 –

இன்று, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசால் வன்னியர்களுக்கு  வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிவுள்ளது. அது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களோடு தீவிரமாக கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட தொடர் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அளித்துள்ள அவ்வறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை இரத்து செய்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிவுள்ள அத்தீர்ப்பில் எந்த ஒரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு எனவும், அதேச்சமயத்தில் இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லையெனவும் சுட்டிக்காட்டி இதற்காக அமைக்க்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ள்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் எனவும், ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்த தைப்போல சரியான தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தால் இந்த சட்டம் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்திய படி மூத்த வழங்கறிஞர்களை நியமித்து இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தச்சூழ்நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் துரை முருகன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here