பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
அப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவ்வாலத்திற்கான மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினார்கள்.
தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
அதனையடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் அவ்விழாவில் வடக்கு பட்டு, நரசிங்கம்புரம், ஆமூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்,
அச்சிறப்புமிகு விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், திரையரங்கு உரிமையாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி, முத்து, ரஞ்சித் குமார், பாபுஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழா ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.