முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி மிருதங்கம், ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட வாத்திய கருவிகளை ஆர்வத்துடன் வாசித்து பஜனை பாடல்களை பாடினார்கள்.
காஞ்சிபுரம், டிச. 16 –
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான் கூறியுள்ளதைப் போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது.
மார்கழி மாதத்தில் சிவன் கோவில்களில் திருவெம்பாவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையையும் பாடப்படும். மார்கழி மாதம் பிறந்தாலே தெருக்களில் பஜனை பாடல் குழுக்கள் பாடிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி பகுதி மலையாள தெருவில் உள்ள அரி பஜனை கோவிலுக்கு அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் திலகமிட்டு வந்த சிறுவர்கள், முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி கோவிலில் உள்ள ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, உள்ளிட்ட இசைக்கருவி வாத்தியங்களை எடுத்து வைத்துக்கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து பஜனைப் பாடல்களை மனமுருக பாடி வருகின்றனர்.
மார்கழி மாதத்தில் பஜனைப் பாடல்களை பாட முதியவர்களே மறந்து வரும் நிலையில், மார்கழி மாதம் பிறந்த முதல் நாளே ஆர்வத்துடன் வந்து பஜனைப் பாடல்களைப் பாடத் துவங்கிய சிறுவர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.