திருத்தணி, ஆக. 21 –
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு செய்திடும் வகையில், அப்பள்ளி வகுப்பறைகளுக்கு போடப்பட்டிருந்த இரும்பு பூட்டுகளில், வக்கிரப்புத்தியுள்ள மர்மநபர்கள் மனிதக்கழிவுகளை அப்பூட்டில் தடவியும் மேலும் அப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியினை உடைத்தும் அம்மாணவர்களின் கல்விக்கற்கும் செயலுக்கு, தடையை ஏற்படுத்தும் செயலில் மர்மநபர்கள் ஈடுப்பட்டுள்ளதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்களோடு இணைந்து மாணவர்களின் பெற்றோரும் அப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அவ்விழிவுச் செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், அதனால் அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதுத் தொடர்பாக பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தும், அப்பிரச்சினைக் குறித்து, இதுவரை பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணாக்கர்களின் கல்விக்கான பாதுகாப்பினை ஏற்படுத்திடும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென அப்போது அவர்கள் தெரிவித்தனர்.




















