கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் ஆகிய 5 சிவாலயங்களில் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏனைய ஆறு சைவ தலங்களில் ஏகதின உற்சவமாக அவ்விழா இன்று நடைபெறுகிறது அதுபோலவே, விழா தொடர்புடைய ஐந்து வைணவ தலங்களில், சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள் மற்றும் இராஜகோபாலசுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் 16ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது ஏனைய 2 தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா இன்று நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது விழாவின் 9ம் நாளான இன்று மாலை மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், உற்சவர் சுவாமி அம்பாளுடன், பஞ்சமூர்த்திகளும் தேருக்கு எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம், மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை பக்தி சிரத்தையுடன் வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.




















