திருவாரூர், மார்ச். 12 –
இன்று திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக வளாகத்தில் உள்ள உள் அரங்கில் அதன் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டங்களை பெற வந்த அப்பல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையணிந்து வந்தனர்.
மேலும், இப்பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கையை வாசித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுடெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் இயக்குனர் ரமேஷ் வி. சோண்டி கலந்து கொண்டு பாரம்பரிய உடைகளில் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
இதில் 523 மாணவிகள் 394 மாணவர்கள் என மொத்தம் 917 பேர்கள் பட்டம் பெற்றனர், 36 மாணவ மாணவிகள் முனைவர் பட்டமும், 39 பேர் தங்கப்பதக்கமும் பெற்றனர்.
இப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 2500 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். குறிப்பாக இதில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகும். இந்த எண்ணிக்கையை மேலும், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.