பாபநாசம், மார்ச். 12 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக இச்சாலையை சீரமைத்து தரக்கோரி கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவஹிருல்லா அத்துறை சார்ந்த அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்..
அதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரிலும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இப்பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து, பணி ஆணை அறிவிப்பு வழங்கினார். அதனடிப்படையில் இச்சாலை சீரமைப்பு பணிகள் தற்போது நடைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பணிக் குறித்து, அவ்விடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற் கொண்டு அப்பணியாளர்களிடம் சாலை அமைப்பதை தரமாகவும், மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் சாலை சீரமைப்பு பணியினை விரைந்து முடித்திடவும் அப்போது அவர்களுக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவஹிருல்லா அறிவுறுத்தினார். உடன் நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடனிருந்தனர்.




















