மதுக்கூர், அக். 09 –

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பட்டுக்கோட்டை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பற்றி கூறி வருகின்றனர். காட்டுப் பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களிலும் கரும்பு வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும்  மேய்ந்து அப்பயிர்களை மிதித்தும், நசுக்கியும் சேதம் ஆக்குகின்றன. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு முறைகளில் முள்வேலி மின்சார வேலி மற்றும் வண்ண துணிகளை நிலத்தை சுற்றி கட்டியும் பல்வேறு ரசாயன மருந்துகள் பயன்படுத்தியும் தோல்வியடைந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மூலம் உயிரியல் முறையில் காட்டு பன்றி விரட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த இயற்கை விரட்டியை பயன்படுத்தி மூன்று மாதம் வரை காட்டுப்பன்றிகளினால் ஏற்படும் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க முடியும். இயற்கை காட்டு பன்றி விரட்டி விரிஞ்சிபுரம் கேவிகே மூலம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காட்டுப்பன்றி விரட்டி பயன்படுத்தும் முறைகள்

ஒரு ஏக்கருக்கு 500 மில்லி காட்டுப்பன்றி விரட்டி தேவை. பயிர் செய்திருக்கும் நிலத்தை சுற்றி வரப்பு பகுதிகளில் பத்தடி இடைவெளியில் இரண்டடி உயர குச்சிகளை நட்டு வைக்கவும் .பின்குச்சிகளை 1.5 அடி உயரத்தில் கட்டுக் கம்பி கொண்டு இணைத்து கட்ட வேண்டும். நடப்பட்டுள்ள குச்சிகளின் இருபுறமும் களைசெடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோமியோ கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் மருந்து புட்டிகள் போல ஐந்து மிலி கொள்ளளவு கொண்ட 100 சிறிய டப்பாக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் ஐந்து மிலி அளவு மருந்தினை ஊற்றி டப்பாவின் நான்கு திசைகளிலும் நான்கு துளைகளை இட்டு இவற்றை நூல் கொண்டு கட்டி சீரான இடைவெளியில் வயலில் நான்கு திசைகளிலும் நட்டுள்ள கம்புகளில் கட்டி தொங்கவிட வேண்டும். டப்பா சாய்ந்து விடாமல் நேராக கட்ட வேண்டும். இதிலிருந்து வெளிவரும் வாசனை சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு காட்டுப் பன்றிகள் வராமல் குறைந்தது மூன்று மாதம் வரை தடுக்கும். இதில் உள்ள வாசனை காட்டு பன்றிகளுக்கு பிடிக்காததால் வயல் பக்கம் வருவதில்லை.

எனவே விவசாயிகள் மேற்கண்ட தாவர காட்டுபன்றி விரட்டிகளை பயன்படுத்தி பன்றி தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் விலை ரூ. 590. தேவைப்படும் விவசாயிகள் பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் விரிஞ்சிபுரம் அவர்களை தொலைபேசி மூலமாகவோ 0416-2900242 அல்லது arsvrm@tnau.ac.in

என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு பெற்று பயன்பெறலாம். நேரில் சென்று வாங்க இயலாதவர்கள் 700 ரூபாய் இணைய வங்கி மூலம் செலுத்தி தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here