திருவாரூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இசை ஒன்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தந்த இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீதியாகபிரம்மம், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகிய மூவரும் திருவாரூரில் கி.பி.17ம் நூற்றாண்டில் அவதரித்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் மூன்றாவதாக அவதரித்த ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் கி.பி.1776ம் ஆண்டு பங்குனி மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் திருவாரூர் மேலவடம்போக்கித்தெருவில் உள்ள ஒரு சிறிய இல்லத்தில் அவதரித்தார்.
இவரது வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகளை இறைவன் மீது இயற்றி இறைவனை ஆராதித்தவர். குறிப்பாக முருகப்பெருமான் மீது அதிக பக்திகொண்டு பல கீர்த்தனை பாடியுள்ளார். இவரது கீர்த்தனைகளில் அனைவரையும் கவர்ந்து ஈர்த்த ராகபாவம் ததும்பும் நவாவர்ண கீர்த்தனையானது மிகவும் பிரசித்தி பெற்றது.
பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவர் அவதரித்த திருவாரூரில் உள்ள ஜென்மபூமியானது மிகவும் சிதலம் அடைந்த நிலையில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் சார்பில் கடந்த சில ஆண்டுகாலமாக புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக நான்கு கால யாகசாலை வேள்வி பூஜைகள் ஏராளமான வேதபண்டித சாஸ்திரிகளைக்கொண்டு நடைபெற்றது. இன்று 4-ம்கால யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூர்ணாகதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்கள் ஊர்வலமாக கோபுர விமான கலசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டதை தொடர்ந்து, கடங்களில் இருந்த புனித தீர்த்தம் கோபுர விமான கலத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்தசர் அவதார ஜென்மி பூமியில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீகமலாம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கும், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் திருவுருவ சிலைக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சரை வழிபட்டனர்.