கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும், மகாமக திருவிழா தொடர்புடைய ஐந்து வைணவ தலங்களில் ஒன்றானதுமான, திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்ய பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட தலம், சக்ரபாணிசுவாமி திருக்கோயில் ஆகும்..
இத்தலத்து பெருமாளை சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அகிர்பதன்ய மகரிஷி, அக்னிபகவான் ஆகியோர் வழிபட்டதால் உலகில் வேறு எங்கும் காண முடியாத வகையில் இத்தலத்து பெருமாளுக்கு துளசி மட்டுமின்றி, செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னியிலை, குங்குமம் ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது
ஜலந்திராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவனை அழித்த பின்னர் கும்பகோணம் காவிரியன் தென்கரையில் பூமியை பிளந்து மேலே எழுந்தது. இதனை கண்ட பிரம்மா அந்த ஸ்ரீ சக்கரத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஸ்ரீ சக்கரத்தின் ஒளி சூரியனின் ஒளியை விட பன்மடங்கு அதிகமாக இருந்து கண்டு கர்வம் கொண்ட சூரியன், ஸ்ரீ சக்கரத்தை காட்டிலும் தன் ஒளியை கூட்ட, சூரியனின் கர்வத்தை அடக்க, ஸ்ரீ சக்கரம் பேரொளியை விடுத்து சூரியனின் ஒளியை அதனுள் அடக்கியதால் சூரியன் தன்னொளி இழந்தான் ஒளியிழந்த சூரியன் தன்னொளி மீட்கவும், தனது பெயரால் இத்தலம் பாஸ்கரசேஷத்திரம் என அழைக்கப்பெறவும் வேண்டும் என வேண்ட, அது போலவே ஸ்ரீ சக்கரத்தில் இருந்து தோன்றிய சக்ரபாணிசுவாமி அவ்வாறே அருளச்செய்தார்.
அது முதற்கொண்டு இச்ஷேத்திரமே பாஸ்கரஷேத்திரம் என்றும், இத்தலம் சக்ரபாணிசுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப் பெறுகிறது இத்தகைய பெருமைமிகு வைணவதலத்தில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு சக்ரபாணிசுவாமிக்கும் விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும், நடைபெற்று அக்னி வளர்த்து பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, பங்குனி திருவோண திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தேறியது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.






















