மயிலாடுதுறை, மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

தமிழகம் முழுவதும்  இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில்  அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை  நல வாழ்வு மையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக  ஜேசிபி இயந்திரம் பொம்மைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். கிராமப்புறங்களில் 543 இடங்கள், நகர்புறங்களில் 39 இடங்கள் என்று மொத்தம் 582 மையங்களில் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புறங்களில் 8,409 குழந்தைகள் கிராமப்புறங்களில் 53,768 குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 10 குழந்தைகள் என்று 62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இன்று விடுபட்டவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் சிறப்பு முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்காக 3 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here