ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது..
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருவள்ளூர், செப், 1 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் புனரமைத்து, ரூ 28.16 கோடி மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் படகு சவாரி தொடங்கி மக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்கு மட்டும் பயன் படுத்தி வருகின்றனர்.. பல ஆண்டுகளாக பருத்திப்பட்டு ஏரியில் ஆவடி மாநகராட்சி யின் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் கால்வாய் வழியாக நேரடியாக கழிவுநீர் ஏரியில் கலந்து வருவதால் நீர் மாசடைந்து கடந்த ஒரு வாரமாக பருத்திப்பட்டு ஏரியில் கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் இறந்து மிதந்து வந்தது… நேற்று காலை திடீரென சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து மிதப்பதால் ஏரி நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் காணப்பட்டது.. இதுகுறித்து மாநகராட்சி அதிகரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தற்போது அதனை படகு மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. ஆவடி மாநகராட்சி பகுதியில் உருவாகும் கழிவுநீர் ஏரியில் கலந்து மீன்கள் செத்துப்போனது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.