காஞ்சிபுரம், மே. 10 –
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009 – ஆம் ஆண்டு அவரது சித்தப்பா தயாளன் என்பவர் அச்சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சஞ்சீவி தியேட்டர் பின்புறம் உள்ள வயல்வெளியில் வைத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன் சிறுமியின் தலையில் இருந்த ரிப்பனை கழற்றி கழுத்தை நெரித்து கொலை செய்ய தயாளன் முயன்றதாக மாங்காடு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தயாளன் மீது சுமர்த்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000-ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6,000- இழப்பீடு வழங்கவும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.





















