ராமநாதபுரம்:

திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்… மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிகளின் சக்தி கேந்திர சம்மேளனம் நிகழ்ச்சி ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே தீனதயாளன் உபாத்யாயா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக மாநில தலைவர் தமிழைச சவுந்திரராஜன் வரவேற்றார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து பாஜவின் அகில் இந்திய தலைவர் அமித்ஷா கூட்டத்தில் பேசியதாவது:

தமிழக பாஜக தொண்டர்களை சந்தித்ததில் பேரானந்தம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, மதுரை மீனாட்சி அம்மன் பாதங்களை தொட்டு வணக்கம் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி உடன்பாடு அமைத்த பிறகு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளேன். தேசிய ஐனநாயக கூட்டணியில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். தமிழகத்தில் 35 லோக்சபா தொகுதிகளையாவது அதிமுக, பாஜ , கூட்டணி கைப்பற்றும் .. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும். காஷ்மீரில் சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர் கள் உயிர் தியாகம் வீண் போகாது. அதில் தமிழக வீரர்கள் 2 பேர் அடங்குவர் .

மோடி அரசு தீவிரவாதத்தை சகித்து கொள்ளாது, தீவிரவாதத்திற்கு எதிரானது தான் மோடி அரசு . உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும். இந்தியாவில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் பல்வேறு தலைவர்களை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தரை சிகாகோ மாநாட்டிற்கு மன்னர் பாஸ்கர சேதுபதி அனுப்பி வைத்தார். மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் ஏவகணை மூலம் பாரதத்தின் பாதுகாப்பை உறுதி செய்தார். எனவே இப்பகுதி நாட்டின் சிறந்த பகுதி ஆகும்.

2019 லோக் சபா தேர்தல் யுத்தத்திற்கு தயாராகும் வகையிலான இம்மாநாடு முன்னுதாரணமாக அமையும். பாஜகவின் பலம் உங்களை போன்ற செயல் வீரர்களின் அடிப்படை உழைப்பே பாஜவின் பெரிய வெற்றி யாகும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். மெகா ஊழல் கூட்டணியான திமுக., காங்., கூட்டணி இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராவது பாஜவுக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே அவசியமான ஒன்று. ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்த காங்., திமுக கூட்டணி நாட்டிற்கு என்ன நல்லது செய்து விடப் போகிறது. திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல்.

தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்….! மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை. தமிழக மக்களுக்கு ஸ்டாலின் கணக்கு சொல்லியேயாக வேண்டும் என கேட்கிறார், பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் தமிழகத்திற்கு ரூ.94,540 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2014 – 2019. பாஜ ஆட்சியில் ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது காங்., ஆட்சியில் ஒதுக்கிய நிதி யை காட்டிலும் 5 மடங்கு அதிகம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1246 கோடி, நெசவு தொழில் மேம்பாடு ரூ.1240 கோடி, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.2,875 கோடி, சென்னை மோனோ ரயில் திட்டம் ரூ.3,267 கோடி, தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ.23,116 கோடி, ரயில்வே திட்டம் ரூ.20,000 கோடி , வர்தா புயல் வறட்சி நிவாரணம் ரூ.2000 கோடி, பிரதமர் வீடு கட்டும் திட்டம் ரூ.3,400 கோடி, ஸ்மார்ட் சிட்டி ரூ.1700 கோடி, அம்ருதா (நகர் மேம்பாடு) ரூ.4,700 கோடி, மாநில சாலை மேம்பாட்டு திட்டம் ரூ.23,705 கோடி, பாரத் மாதா திட்டம் ரூ.14,400 கோடி, சாகர் மாலா திட்டம் ரூ.1,10, ooo கோடி, நெகமம் துறைமுகம் மேம்பாடு ரூ.28,000 கோடி தமிழக மக்களுக்கு நாங்கள் கணக்கு காட்டி விட்டோம். ஸ்டாலின், ராகுல் கூட்டணி தமிழக மக்களிடம் ஊழல் கணக்கு மட்டுமே காண்பிக்க முடியும். சமீபத்திய மோடி அரசின் பட்ஜெட்டில் 15 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வீதம் ரூ.75,000 கோடி வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது .

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக இருந்த வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சம் என இரட்டி பாக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் அளவிற்கு சிறு தொழில் செய்வோர் வர்த்தக பதிவிலிருந்து விலக்கு ரூ.60 லட்சம் வரை சிறு, குறு தொழில்களுக்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. நீண்ட கடற்கரையை கொண்ட தமிழகத்திற்கு மீன் பிடி தொழில், முறைசாரா தொழிலாளர்கள், நாடோடி மக்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழகத்தை சேர்ந்த பெண்ணான நிர்மலா சீத்தாராமனுக்கு இந்திய பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர காலத்திற்கு பின் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என உங்களுக்கு . தெரியுமா? நான் சொல்லட்டுமா? திங்கள் _ மாயாவதி, செவ்வாய் – அகிலேஷ், புதன் – சந்திரபாபு நாயுடு, வியாழன் – தேவகவுடா, வெள்ளி – மம்தா பானர்ஜி, சனி – ஸ்டாலின், ஞாயிறு – நாட்டிற்கு பிரதமர் இருக்க மாட்டார். அன்று பந்த். மோடி உலக மக்களால் விரும்பப்படும், நேசிக்கப்படும் தலைவராக உருவெடுத்துள்ளார். தினமும் 18 மணி நேரம் உழைக்கும் மோடி நம்பகத்தன்மை உடையவர்.

ஊழலற்றவர்.பாஜவுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்தால் தனிமனித முன்னேற்றம் உள்ள சக்தி மிகுந்த நாடாக இந்தியா உருவெடுக்கும். மத்தியில் பாஜ அரசு அமைய மோடி மீண்டும் பிரதமராக அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்திய வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக துணை தலைவர் கள் சுப.நாகராஜன், குப்புராமு, பி.டி.அரசகுமார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் பொன்.பால கணபதி, கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாவட்ட தலைவர் முரளிதரன், துணை தலைவர் குமார், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here