பூவிருந்தவல்லி, மே. 24 –
21 உறுப்பினர்களைக் கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், மற்றவை என்ற பிரிவில் உள்ளவர்கள் 6 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் மேலும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என ஆக மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நகராட்சிக்கு தலைவராக 18 வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த காஞ்சனா சுதாகர் உள்ளார். மேலும் இதில் மொத்தம் உள்ள 21 உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.
இந்நிலையில் பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவரின் தவறான அதிகார நடவடிக்கையால் மக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் அவல நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
பூந்தமல்லி நகர மன்ற கூட்டம் இரண்டாவது முறையாக நேற்று மே 23 – 2022 திங்கட்கிழமை 3 மணி அளவில் நடக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள்.
அதன்படி 19-வார்டு கவுன்சிலரும் நகரமன்ற தலைவர் அலுவலகத்தில் அவரைச் சென்று சந்தித்தித்து பேசி விட்டு ஒரு மணி நேரம் கழித்து கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
மேலும், இந்த கூட்டரங்கில் இரண்டு கவுன்சிலர் மட்டுமே இருந்தனர். உடனே நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் கூட்டம் தொடங்கி பத்து நிமிடத்தில் கூட்டம் முடிவடைந்தது. எனத் தெரிவித்தார். மேலும் யாராக இருந்தாலும், என்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்றாலும், தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றாலும் எனது தனிப்பட்ட அறைக்குள் வந்து கூறுங்கள் எனவும், மேலும் யாரும் இங்கு கேள்விகளை கேட்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து பத்தே நிமிடத்தில் கூட்டத்தை முடித்தார்.
இவரின் இச்செயல்பாட்டிற்கு ஆதரவாக பூந்தமல்லி ஆணையர் நாரயணனும் செயல்பட்டு வருவதாகவும் குற்றச் சாட்டு எழுகிறது. கூட்டத்தில் செய்தி சேகரிக்க வந்த 10 பத்திரிகை நிருபர்களுக்கு தனி அறை வழங்கி அங்கு அமர வைக்கப்பட்டனர்.
அந்த அறைக்குள் இவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் இருக்க ஒலிபெருக்கியை ஆப் செய்து கூட்டத்தை நடத்தினர். மேலும் இக்கூட்டத்தில் போடப்பட்ட தீர்மான நகல்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் செய்தியாளர்களுக்கு மட்டும் அளித்து விட்டு மற்ற செய்தியாளர்களை ஏளனமாகவும், தரக்குறைவாகவும் நடத்தி அங்கிருந்து அப்புறப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டச் செயல் அங்கிருந்த அனைவரையும் சற்று நேரம் திகைப்படச் செய்தது.
இப்படி மறைமுக செயல்பாடுகள் எதனை வெளிப்படுத்துகிறது என்பதும் பல்வேறு கேள்விகளை அனைவரிடத்திலும் ஏற்படுத்துகிறது. இதனை உடனடியாக மாவட்ட நகர ஊரக உள்ளாட்சித்துறை நிர்வாகமும், தமிழக நிர்வாகமும் தலையிட்டு இந்நிலையை சரிப்படுத்த தவறும் பட்சத்தில் பல்வேறு எதிர்கட்சிகளிடமும், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரிடத்திலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெயரளவுக்கே பெண் உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளது மற்றபடி முழுமையான ஆதிக்கத்தை அவர்களின் கணவன்மார்களை செய்து வருவதாகவும் புகார் எழுகிறது. இப்போக்கையும் தடுத்து நிறுத்தி பெண் உறுப்பினர்களை முழுமையான அளவில் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவும் சாமன்ய மக்கள் முதல் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதனை வலியுறுத்தி கோரிக்கை வைக்கின்றனர். எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க முயலுகிற தமிழ்நாடு அரசு இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே எங்களின் நோக்கமும் ஆகும்.
உண்மையான ஜனநாயகம் தழைக்க வேண்டும் தன்னிச்சை அதிகார போக்கு தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக பெரிய நிறுவன செய்தியாளர்கள் சிறு நிறுவன செய்தியாளர்கள் என்ற மனப்பான்மை எண்ணம் கொண்டு செயல்படும் போக்கினை அதிகாரத்தில் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது என்பதையும் வலியுறுத்திகிறோம். தீ யில் பெரும் தீ சிறு தீ என்ற மனப்பன்மை அகற்றப்பட வேண்டும். செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு உரிய மதிப்பினை வழங்கிட வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
அதிகாரம் என்பது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பணி செய்யவேயன்றி தன்னலத்தை காக்கவோ தடமாறி அராஜக போக்கோடு செயல்படவோ தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என நினைவுக் கொள்வோர் அதனை நீக்கி விடுவது நல்லதென எண்ணுகிறோம் என அந்நிகழ்வில் கலந்துக் கொண்டு அதிகார வர்க்கத்தால் அவமதிக்கப்பட்ட சிறு நிறுவன செய்தியாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும் அங்கு வந்த செய்தியாளர்களிடம் இந்நிகழ்வை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச்சென்று அரசின் நல்மதிப்பை உயர்த்த முற்படும் செய்தியாளர்களின் மனநிலையையும் பாதிக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் தொடருமாயின் அவர்களை காலம் மாற்றும் என்பதே உண்மை ….