பொன்னேரி, ஜூலை. 12 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள், பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்தமானதை கண்டறிந்து, அவர்களை தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழும், மேலும் கல்வி உரிமை அனைவருக்கு மானதென்ற அடிப்படையிலும், அம்மாணவர்களை மீண்டும் பள்ளியில் தொடர்ந்து கல்வி பயிலுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி பள்ளியில் சேர்க்கும் பணியினை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர், பாலாஜி நகர் அரசினர் தொடக்கப்பள்ளியில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பள்ளிக்கு அருகாமையில் உள்ள நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பாலாஜி நகர் அருகாமையில் உள்ள கள்ளுக்கடைமேடு பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் கிராம குழந்தைகளும் பள்ளிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டினை அங்குள்ள ஆசிரியர்கள் முன் வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் குளோரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஸ்கர், அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மெய்யழகன், வார்டு உறுப்பினர் லதா, திருவள்ளூர் மாவட்ட பள்ளி மேலாண்மை குழு பார்வையாளர் முத்து உள்ளிட்ட குழுவினருடன் அரிசி ஆலை மற்றும் கள்ளுக்கடை மேடு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் குழந்தைகள் கல்வி கற்றலில் இடைநிறுத்தம் இருக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தைகள் கல்வி கற்றலுக்கு உதவும் வகையில் நகர் மன்ற தலைவர் செயல்பட்ட விதத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here