கும்பகோணம், ஏப். 22 –
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் உள்ள நான்கு கோயில்களின் நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து மண் எடுத்து செங்கல் காளவாய் அமைத்து நிலத்தைப் பாழ்படுத்தி இருப்பது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் உத்தரவின்படி பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுந்தரராஜன் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் நான்கு கோயில்களின் நிலங்களை ஆக்கிரமித்து மண் எடுத்தும், செங்கல் காளவாய் அமைத்தும் நிலத்தைப் பாழ்படுத்திய 12 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
கும்பகோணம் அருகேவுள்ளது பந்தநல்லூர், அப்பகுதியில் இந்துசமயம் அறநிலையத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் ஆக்கிரமித்திருந்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.66 ஏக்கர் நிலம், அபிராமபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சாயனபுரத்தில் 62 சென்ட் நிலம், நெய்க்குப்பையில் 1.4 4 ஏக்கர் நிலம், அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் 1.09 ஏக்கர் நிலம், மற்றொரு பகுதியில் 35 சென்ட் நிலம், நெய்வாசல் தடாகபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 7 இடங்களில் சுமார் 7.5 ஏக்கர், சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அரசேரி கிராமத்திலுள்ள 1.16 ஏக்கர் நிலம் என அனைத்து பகுதிகளிலும் இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் சுந்தரராஜன், தக்கார் கோகிலா தேவி, வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் அனுசியா உள்ளிட்ட அலுவலர்கள் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகளை கையகப்படுத்தி சீல் வைத்தனர்.
இந்துசமயம் அறநிலையத்துறை சின்னம் பொறிக்கப்பட்ட சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் ஒவ்வொரு இடத்திலும் அமைத்தனர்.
கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் எவ்வித அனுமதியும் பெறாமல் மண் எடுத்து செங்கல் காளவாய் போட்டு விற்பனை நடந்துள்ளதும், குளம் வெட்டியும், ஒரு சில இடங்களில் கிரஷர் அமைத்து நிலங்கள் பாழாக்கப்பட்டு, விளைநிலங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. அவை அனைத்தும் இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் இப்பணியை மேற்கொண்டனர்.





















