காஞ்சிபுரம், ஆக. 28 –

முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான நிலம் கையகப்படுத்த  13 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நிலங்களை கைப்பற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இது தொடர்பாக ஏகனாபுரம் கிராம ஊராட்சியில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்த நிலை உருவாகியுள்ளதால் இதற்கு பெருத்த எதிர்ப்பு கிளம்பி தங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளான பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன், மதனந்தபுரம் பழனி, காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகனாபுரம் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய கிராமப் பெண்மணி ஒருவர், எங்களது ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத்தர மாட்டோம் என ஆவேசமாக முழக்கம் எழுப்பினார் மேலும், தமிழக முதல்வரே வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்களது இடத்தை விட்டு தர தயாராக இல்லை என கூட்டத்தில் அப்பெண்மணி பேசியது பெரும் பரபரப்பை எழுப்பியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here