கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஜி.கே. வாசன் அயோத்தி ராமர் கோவில் திறப்பு என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி எனவும், மேலும் அதுப்பற்றி தமிழக முதலமைச்சர் ஒரு தவறான கருத்தை பதிவிட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் அக்கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் திறக்கப் பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே லட்சக்கணக்கான மக்கள் அக்கோயில் சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் ஜி கே வாசன் தெரிவித்தார்.
ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக அரசு விளம்பரத்திற்காகவே அவசரக் கோலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துள்ளனர் எனவும் அதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் திமுக அரசை சாடினார்.
மேலும் பாராளுமன்ற நிகழ்வுகளைப் போலவே சட்டமன்ற நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற அவர் அப்போதுதான் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்க்க முடியும் என்றார். மேலும் அவ்வாறு திமுக அரசு செய்தால் அங்கு அவர்களால் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மகளிருக்கான திட்டங்கள் அதிக அளவில் நடைபெற்றதாகவும் ஆனால் தற்போது தமிழக அரசு அறிவித்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் என்பது முழுமையாக அனைவருக்கும் சென்றடையவில்லை எனவும் மேலும் அதில் பாகுபாடு பார்க்க படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் அரசின் திட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுவதாகவும் கருத்து தெரிவித்தார். திருச்சபை, மசூதி உள்ளிட்டவை வரலாற்று சிறப்புமிக்க வகையில் அமையப்பெற்று இருந்தால் அவை வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியாவிற்கு ஒரே மாடல்தான் உள்ளதெனவும் அது எளிமை நேர்மை வெளிப்படை தன்மை என்பதே ஆகும் எனவும் அவைகள் இருந்தாலே வலிமையான தமிழகம் வலிமையான பாரதம் அமையும் எனவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி நடைபயணம் தடை என்ற கருத்துக்கள் அந்தந்த மாநிலங்களின் கோட்பாடுக்குட்பட்டு நடைபயணம் அமைய வேண்டும், எனவும் அவைகள் மீறப் படும்போது போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற ஜி.கே.வாசன் பொதுவாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.