கும்பகோணம், மார்ச். 01 –
கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒன்று சேர வழக்கமாக இங்கு நடைப்பெற்று வருகிறது.
அதுபோல் இவ்வாண்டும் இவ்விழா ஆறு சைவ தலங்களில் கடந்த 25 ஆம் தேதி சனிககிழமையும், தொடர்ந்து வைணவத்தலங்கள் மூன்றில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிறுக்கிழமையும் கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவின் நான்காம் நாளான கடந்த திங்கட் கிழமையன்று சைவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து சேக்கிழார் பெருமான் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் வரிசையாக தனித்தனி வாகனங்களிலும் எழுந்தருள, கோயில் யானை மங்களம் முன் செல்ல, சிறப்பு மேள தாள, நாதஸ்வர மங்கல இசை முழங்க, வீதியுலா விசேஷ தீபாராதனையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அழகிய வெள்ளிப் பல்லாக்கில் உற்சவர் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையுடன் எழுந்தருளி உலா வந்தனர்.
தொடர்ந்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனி பல்லாக்கில் எழுந்தருளி உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீதியுலா கண்டருளிய சுவாமிகளையும், அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒருசேர தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6ம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில், 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது