கும்பகோணம், மே. 30 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, தேவராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பெண் கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை, மற்றும் கூலி உயர்வு போன்ற காரணம் கருதி, நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு, விவசாயிகள் இப்பகுதியில் கோடை விவசாய பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாகவும், உள்ளூர் தொழிலாளர்களை விட விவசாயப் பணிகளை வட மாநில தொழிலாளிகள் விரைவாக முடிப்பதாக அப்பகுதி விவசாயிகள் நம்புகின்றனர்.
மேலும், வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கபடும் அபாயநிலையும் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாய கூலித் தொழிலாளிகள் அச்சமடைவதாக தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகளை வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் செய்து வந்த நிலையில், தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பெண்களும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.