சென்னை, பிப். 12 –

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கூறியதாவது:

மீனவர்களின் நலனுக்காக ‘நீலப் புரட்சி’, மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம்  போன்றவற்றை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. நீலப் புரட்சி திட்டம், 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான  ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் மீன்வள மேலாண்மை திட்டம் ஆகும். இத்திட்டம் கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

தற்போது  பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை மீன்வளத்துறை அமல்படுத்தி வருகிறது. இது மீன்வளத்துறையில் நிலையான  மற்றும் பொறுப்பான மேம்பாடு மூலம் நீலப் புரட்சியை ஏற்படுத்தும் திட்டமாகும்.  இத்திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு முதல் 2024- 2025ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இதில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகாலத்தில் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்து உதவி அளிக்கப்படுகின்றது.  இத்திட்டத்தின் கீழ் மீனவர் ஒருவருக்கு தலா ரூ.4,500 அளிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கி மீனவர்கள் இறந்தாலோ, அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டாலோ ரூ.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. ஒரு பகுதியில் நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2,50,000 வழங்கப்படும். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ரூ.25,000 வழங்கப்படும்.

மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் பங்காக தற்போது  வரை ரூ.369.55 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here