நன்னிலம், ஜூலை. 16 –
நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி கிராம குளத்தை தூர்வாருவது தொடர்பாக திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தில் ஏறி நின்று நாம்தமிழர் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்க்கு உட்பட்ட வேலங்குடி ஊராட்சிக்கு சொந்தமான பஞ்சாயத்து குளம் தூர் வாருவதற்காக சுமார் ரூ. 23 – லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அதனை திமுக கட்சியைச் சார்ந்த நபர் டெண்டர் எடுத்து அதற்கான தூர்வாரும் பணியினை தொடங்கினார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் குளத்தை முறையாக அளந்து வெட்டவில்லை எனவும் முறையாக சர்வேயர் வைத்து அளந்து வெட்ட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஊழல் செய்வதற்காகவே தூர்வாரும் பணியினை தொடங்கியதாக கூறி தொடர்ந்து திமுகவினரிடம் நாம்தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாம் தமிழர் கட்சியினர் ஜேசிபி இயந்திரத்தின் மீது ஏறி நின்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்த நிலையில் இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவலிறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு பணித்தனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.