மீஞ்சூர், மே. 28 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (58). இவர் மனைவி, மகன், மருகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் இவர், ஐ.ஓ.சி. எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிக் கொண்டே, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவ்வப்போது இரவு நேரங்களில் மது அருந்தும் பஞ்சநாதன் வீட்டில் தூங்காமல் தமது வீட்டின் வெளியே காலியாக இருக்கும் கடையில் தூங்குவது வழக்கமாக கொண்டுயிருந்துள்ளார்.
அதுப்போன்று, நேற்றிரவும், மது அருந்துவதற்காக வழக்கம் போல் வீட்டில் தூங்காமல் தமது கடையில் மது பாட்டிலுடன் பஞ்சநாதன் தங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மது அருந்துவதற்காக தமது மனைவியிடம் தண்ணீர் கேட்டு வாங்கியும் உள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, கடைக்குள் பஞ்சநாதன் தரையில் ரத்த வெள்ளத்தில் சுருண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், மீஞ்சூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை மேற் கொண்டனர்.
மேலும் கடந்த மாதம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பஞ்சநாதனை, மர்ம கும்பல் ஒன்று, அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று தூங்கி கொண்டிருந்த பஞ்சநாதன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளதால். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா, அப்போதே பஞ்சநாதனைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்ததால் இரண்டாவது முறையாக முயற்சித்து இன்று கொலை அரங்கேறி உள்ளதா இல்லையெனில், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமா, தொழிற்சாலையில் ஏதேனும் முன்பகை உள்ளதா, குடும்பத்தில் உறவினர்களிடையே பகை உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆங்காங்கே சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கியுள்ளனர். மேலும் கொலையை துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.