காஞ்சிபுரம், ஆக. 30 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் வெங்கச்சேரியில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா டிஎஸ்பி ஜூலியர் சீசர், காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பாசில்பிரேம்ஆனந்த், மாகரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக கலைந்து சென்றனர்.