பொன்னேரி, ஏப். 08 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி குரு வட்டத்தில் அடங்கிய விவசாயிகளின் மாதாந்திர நலன் காக்கும் நாள் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்காததால் விவசாயிகள் பெரும் மன வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தனர். .
இக்கூட்டத்திற்கு குறிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வெகு நேரமாகியும் அரசு உயர் அலுவலர்கள் வராதக் காரணத்தினால் விவசாயிகள் வெகு நேரமாகக் காத்திருந்து பெரிதும் கோபமடைந்து கலைந்து சென்றனர்.
மேலும் கோட்டாச்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் புவனேஷ்வரி. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை இருக்கையில் அமரும்படி கூறி கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார். அமர்ந்திருந்த விவசாயிகள் நாங்கள் கடந்த மாதத்தில் வைத்த கோரிக்கைகளை இதுவரைக்கும் செயல்படுத்தி தர முடியாத அதிகாரிகள் விவசாயிகளின் மத்தியில் என்ன பேசுவதென தெரியாமல்தான் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளதாக குறை கூறி வெளிநடப்பு செய்தனர்.
மேலும், பல்வேறு விவசாயிகளின் பிரச்சினைக் குறித்த கோரிக்கைகளை மனுக்கள் வாயிலாக இக்கூட்டத்தில் வழங்கயிருந்த நிலையில், விவசாயிகளுக்கு இக்கூட்டம் பெறும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும், வெறும் கண்துடைப்பாக நடைபெறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஏரி பாசன வசதி சங்க உறுப்பினர்களும். விவசாய பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.





















