மதுக்கூர், ஜூலை. 24 –
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது.
விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு தக்கவாறு தழைச்சத்துக்கு யூரியா உரத்தையும், மணி சத்து உரத்துக்கு டிஏபி மற்றும் சூப்பர் உரங்களையும், சாம்பல் சத்து உரத்துக்கு பொட்டாசு உரத்தினையும் அதிக செலவில் வாங்கி மண்ணில் இடுகின்றனர்.
இந்த சத்துக்கள் முழுவதையும் மண்ணிலிருந்து பயிர்கள் எடுத்துக் கொள்வதில்லை, அது தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளும். காசு போட்டு மண்ணில் இட்ட உரங்கள் பயிர் எடுத்துக் கொள்ள இயலாத நிலையை அடைகின்றன. விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிவதன் மூலம் நிலத்தில் உள்ள சத்தின் அளவுக்கு ஏற்ப மட்டும் உரங்களை ரசாயன உரமாகவோ உயிர் உரங்களாகவோ பயன்படுத்தலாம்.

மேலும், ரசாயன உரங்கள் மண்ணின் கட்டமைப்பை மாற்றுவதில்லை குளுக்கோஸ் போல உடனடி தேவையை மட்டுமே சந்திக்கும். ஆனால் மண்ணில் இடக்கூடிய உயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் மண்ணில் நிலைத்திருந்து சிறிது சிறிதாக பயிருக்கு தேவையான பொழுதெல்லாம் தேவையான சத்துக்களை அளித்து வரும். மேலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் நலத்தையும் பராமரிக்கிறது. எனவே விவசாயிகள் நீண்ட கால பராமரிப்பையும் தற்சார்பு விவசாயத்தையும் மனதில் கொண்டு அரசு தற்போது வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கி வரும் திரவ உயிர் உரங்கள் ஆன அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஸ் மொபைலைசிங் பாக்டீரியா உரங்களை வாங்கி பயன்பெறலாம்.
அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிறுக்கு வழங்குவதிலும் மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு எடுத்துக் கொடுப்பதை பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களும் செய்கின்றன. தற்போது விவசாயிகளுக்கு ஒரு பெரிய வரமாக பொட்டாசு உரத்திற்கு மாற்றாக ஃபோட்டோஸ் மொபைல் ஐ சி திரவ உரம் வரப்பற்றுள்ளது. இது மண்ணில் இருக்கும் கிட்டா நிலையில் உள்ள சாம்பல் சத்தினை கரைத்துப் பயிருக்கு எடுக்கக்கூடிய வகையில் மாற்றி தருகிறது.

எனவே விவசாயிகள் வெளியிலிருந்து உரம் வாங்குவதை தவிர்த்து, அவரவர் நிலத்தில் இருக்கும் முதன்மை சத்துக்களை திரவ உயிர் உரங்கள் மூலம் எடுத்து பயன்படுத்திட வேண்டும். இதற்கு விதைகளை நேர்த்தி செய்யும் பொழுது 125 மிலி யும் வேர் நனைத்திட 375 மிலி யும் நடவின் போது 500 மில்லியும் திரவ உயிர் உரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், இரண்டு மூட்டை சூப்பர் உரம் பயன்படுத்தும் இடத்தில் ஒரு லிட்டர் பாஸ்போபேக்டீரியா திரவ உயிர் உரம் போதுமானது. 500 எம்எல் அசோஸ்பைரில்லம் திரவ உயிர் உரத்தில் 5000 கோடி பாக்டீரியாக்கள் இருப்பதால் மண்ணில் மக்கிய உரத்துடன் கலந்து இடும்போது ஒரு ஏக்கர் மண்ணில் ஒரு உரத் தொழிற்சாலை அமைத்தது போல் செயல்படும்.
மேலும் இது ஒரு மூட்டை யூரியா பயன்படுத்துவதையும் குறைக்கிறது. பொட்டாஸ் மொபலைசிங் திரவ உயிர் உரம் ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ பொட்டாஸ் பயிருக்கு கிடைக்கும் வகையில் எடுத்துக் கொடுக்கிறது மேலும் இது ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. திரவ உயிர் உரங்கள் 20 முதல் 30 சதவீதம் விளைச்சலையும் அதிகரிக்கின்றன. மண்ணையும் உயிர்ப்பித்து விவசாயிகளின் உரத்துக்கான செலவையும் குறைப்பதால் விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூலும் தன்னிறைவும் அடைய விவசாயிகளை வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.





















