கும்பகோணம், ஏப். 08 –
கும்பகோணத்தில் ஓடும் மினி பேருந்தில் ஏறி ஓட்டுனரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மினி பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் அரிவாளால் தாக்கிய நபரை தேடி வருகின்றனர். காயமடைந்த மினி பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து தாராசுரம் அருகில் உள்ள எலுமிச்சங்காய் பாளையம் என்ற இடத்திற்கு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் நடத்துனராக விக்னேஷ் என்பவரும் ஓட்டுனராக வசந்த் என்பவரும் பணியாற்றி வந்தனர்.
பேருந்தில் ஏறிய மர்ம நபர் தாராசுரம் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக இறங்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் இல்லை அதனால் நிற்காது என ஓட்டுனரும் நடத்துனரும் தெரிவித்துள்ளனர்.
ஏன் பேருந்து நிற்காது எனக் கூறி பேருந்தின் ஸ்டியரிங்கை மர்ம நபர் திருப்பியதுடன், பஸ் சாவியையும் பிடுங்கி உள்ளார். பேருந்தின் ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு சாவியை பிடுங்கிய நபரை விரட்டி சென்று உள்ளார்.
ஓடிய மர்ம நபர் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்து பேருந்து எலுமிச்சங்காய் பாளையம் வருவதற்குள் பேருந்தை தடுத்து நிறுத்தி நண்பர்கள் கொண்டுவந்த அரிவாளால் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மர்ம நபர் வெட்டி உள்ளார். இதில் ஓட்டுனருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டில் இருந்து ஓட்டுனர் தப்பினாலும் மர்மநபர் கடுமையாக உதைத்ததால் நடத்துனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பேருந்தில் CCTVயில் பதிவான காட்சிகள் காட்சிகளை கொண்டு கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தார் அரிவாளால் வெட்டி தகராறில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது




















