மணலி, ஏப். 30 –
மணலி மண்டலம் 17 ஆவது வார்டுக்குட்பட்ட வடபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொரோனா மீட்புப் பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்தனர்.
நிதி அளித்த அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா மாதவரம் இரட்டை ஏரி அருகே நடைபெற்றது.
சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார். செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய, மாநில வங்கி அதிகாரிகள் சிறு குறு தொழில் முனைவோர் தொழில் நடத்த வங்கியில் எப்படி கடன் பெறுவது வட்டி விகிதம் போன்றவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். முடிவில் சங்க பொருளாளர் கோபி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இதில் ஏராளமானோர் சிறு குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.






















