கும்பகோணம், ஏப். 04 –
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான முருகப்பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து காவடிகள் சுமந்து பாத யாத்திரை செல்வது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று, திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து காவடியுடன் பாதையாத்திரை செல்ல விரதமிருந்த பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முருகப்பக்தர்கள் காவடி சுமந்து சுமார் 15 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு, கும்பகோணம் வழியாக அவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று சுவாமிமலையில் உள்ள மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும், உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சண்முக சுவாமிக்கும் பாலாபிஷேகம் செய்து தரிசித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.