மன்னார்குடி, மார்ச். 01 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவ மாணவிகள் என 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு சென்று மாணவர்கள் பார்வையிட்டனர்.
கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள 16 துறைகளின் பேராசிரியர்கள் பங்கேற்று உயர்கல்வியிலன் முக்கியத்துவம், கல்லூரியின் செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கையில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.





















