கும்பகோணம், ஏப். 19 –
கும்பகோணம் மாநகரம், மோதிலால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடாபிஷக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் கோடாபிஷேகம் விழாவினை முன்னிட்டு மகாமக குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டு, மாநகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
மேலும், அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் கற்பக விநாயகர் காட்சியளித்தார். மேலும் இன்று மதியம் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதனை தொடர்ந்து, வான வேடிக்கையுடன், முக்கிய வீதி வழியாக சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் வெகுச் சிறப்பாக செய்து வருகின்றனர்.