கும்மிடிப்பூண்டி, ஏப். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சத்தியவேடு வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக எஸ்பி வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் டிஎஸ்பி ரித்து அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை ஆய்வாளர் தீபன், தலைமை காவலர் ஆறுமுகம், குமரன் காவலர் முகமது ரியாஸ் ஆகியோர் அடங்கிய குழு கவரப்பேட்டை சத்தியவேடு இணைப்பு சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள மாநில பதிவு எண் கொண்ட சிவப்பு நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அதனை விரட்டி பிடித்த காவலர்குழு சொகுசு காரில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறையிலிருந்த 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த நௌபால் 30, சுள்பி 29 ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
அப்போது கவரப்பேட்டை காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்காவை திறந்து வைக்க வந்த மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் டிஎஸ்பி ரித்து ஆகியோர் கஞ்சா கடத்தியவர்களை துரிதமாக செயல்பட்டு பிடித்து கஞ்சா கடத்தலை தடுத்த ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், துணை ஆய்வாளர் தீபன் ராஜ், தலைமை காவலர் ஆறுமுகம், குமரன், காவலர் முகமது ரியாஸ் ஆகியோரை பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.



















