ராமநாதபுரம், அக். 1- மழை நீரை சேமித்திட தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட பாசனதாரர்கள் நலசங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டினார். தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காரடர்ந்தகுடி மற்றும் பனிதயவல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருமு் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தினை மேம்படுத்திடும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கீழ்வைகை வடிநில ேகாட்டம் பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம் மதுரைரயின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்ககளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதார்களை ஒருங்கிணத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகையுடனும் 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப் படுகின்றன. அதன்படி மேற்குறிப்பிட்ட 69 கண்மாய்களில் 211.47 கி.மீ. நீள அளவிற்கு கரைகள் அகலப்படுத்துதல், 127.90 கி.மீ நீள அளவிற்கு வரத்துக்கால்வாய் புனரமைத்தல், 6.3 கி.மீ. நீளம் அளவிற்கு உபரி நீர் வடிகால் புனரமைத்தல் 112 மடைகள் மராமத்து செய்தல், 133 மடைகள் மீளக்கட்டுதல் 41 கலுங்குகள் மராமத்து செய்தல், 10 கலுங்குகள் மீளக்கட்டுதல், சீமக்கருவேல மரங்களை அகற்றுதல் கண்மாயினை ஆழப்படுத்துதல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது கடந்த ஜூலை 2019 துவங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை சார்ந்த பொறியாளர்கள் தொடர்ந்து கள ஆய்வு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு அப்பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல, விவசாய பாசனதாரர்கள் நலச்சங்கத்திற்கு வங்கி கணக்கு, வங்கி கணக்கு அட்டை, ஜிஎஸ்டி எண் பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வழிவகை செய்யப்பட்டது. மேலும், குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் சீமைக்கருவேல மரங்களை அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இக்குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்கப்படுத்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ம் மற்றும் 3ம் பரிசாக தலா ரூ.5 லட்ச் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ள, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு, உதவி பொறியாளர் லதா, பரமக்குடி தாசில்தார் சரவணன், நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.