பூவிருந்தவல்லி, அக். 01 –
சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கிராண்ட் ஈகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை தாங்கள் நடத்தி வருவதாகவும், தூத்துக்குடி மாவட்ட டீலர்ஷிப் உரிமையை தனக்கு தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டீலர்ஷூப்பை தராமலும், மேலும் பணத்தையும் திரும்ப தராமலும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகவும், எனவே பணத்தை அவர்களிடம் கொடுத்து ஏமாந்ததை உணர்ந்த தான் கணவன் மனைவி இருவரையும் நேரில் சென்று சந்தித்து தரவேண்டிய பணம் குறித்து கேட்ட பொழுது தன்னை கட்டைகளைக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பண மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
அப்புகாரின் பேரில் பூவிருந்தவல்லி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷன் மற்றும் பாண்டிய லஷ்மி தம்பதியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நிமேஷ் எட்வின் என்பவரிடம் எலக்ட்ரிக் இருசக்கர வாகன டீலர்ஷிப் தருவதாக கூறி ரூபாய் 25 இலட்சம் வாங்கி அவரை மோசடி செய்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த பூவிருந்தவல்லி காவல்நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



















