திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுப்பிரமணி, பரமேஸ்வரன், வட்டாட்சியர் மனோகரன், நாகப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.சுந்தரம், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்கள், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காஞ்சி ஊராட்சி, காமாராஜர் நகரில், 183 வீடுகளுக்கு ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சி ஊராட்சியில் 1164 வீடுகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை காஞ்சி ஊராட்சியில் 799 வீடுகளுக்கு புதியதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளது, மீத முள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், நாகப்பாடி கிராமத்தில் பயனாளி முருகன் வீட்டில் தூய்மை பாரத இயக்கத்தின் தனி நபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற் கொண்டார். மேலும், நாகப்பாடி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் அறிவுரை வழங்கினார். நாகப்பாடி ஊராட்சியில் 23 வீடுகளில் தலா ரூ.12 ஆயிரம் செலவில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் வீரானந்தல் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகள் நடை பெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.
இதனை தொடர்ந்து, வீரானந்தல் கிராமத்தில் தனது 2.70 ஏக்கர் சொந்த நிலத்தில் மல்லாட்டா, கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வரும் விவசாயி பெருமாள் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசும் போது, சிறு, குறு விவசாயி சான்று மற்றும் பாரதப் பிரதமரின் கிசான் திட்டம் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது விவசாயி பெருமாள் தனக்கு எந்த சான்றும் இல்லை, எவ்வித பயனும் தான் பெறவில்லை என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக விவசாயி பெருமாளுக்கு சிறு, குறு விவாசயி சான்று வழங்குவதற்கும், பாரதப் பிரதமரின் கிசான் கௌரவ திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வீரானந்தல் கிராமத்தில் பாரதப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி எல்லைக்கண்ணு ஜெயபால் இடத்தில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார். வீரானந்தல் ஊராட்சியில் பாரதப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் போளுர் செங்கம் சாலை முதல், சாமாலை சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.71.08 லட்சம் மதிப்பீட்டில் 2.2 கிலோ மீட்டர் நீளம் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை களஆய்வு மேற்கொண்டார்.