கும்பகோணம், மே. 27 –
நேற்று ரூபாய் 2 கோடி மதிப்பிலான தொன்மையான இரு உலோக சிலைகளை கும்பகோணம் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு கிராமத்தில் சுரேஷ் (32) என்பவர் கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரிடம் இருந்து இரு உலோக சிலைகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அருகே டீ மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் கடத்தி, விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை, காவலர்கள் மதிக்குமார், கோபால், குமாரராஜா, ஜெகதீஸ், ராம்குமார் மற்றும் பிரவீன்செல்வகுமார் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர், சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலைகளை பதுக்கி வைத்திருந்தவரிடம், பேச்சுவார்த்தை நடத்திய போது இச்சிலைகளுக்கு விலை ரூபாய் 2 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிலை கடத்தல்காரரை நம்பவைத்து அவர் சிலையை காண்பித்தவுடன் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது, அவர், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (32) என்பது அப்போது தெரியவந்தது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில் ஒன்று காக்கும் கடவுளாக அறியப்படும் புத்தமத அபலோகிதேஸ்வராவின் மனைவி தாராதேவியின் சிலை என்றும், தாராதேவியின் வழிபாடானது திபெத் நாட்டில் தோன்றியது என்றும், இச்சிலையானது சுமார் 700 ஆண்டு தொன்மையானது என்று தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
மற்றொரு சிலையான அமர்ந்த நிலையிலான விநாயகர் சிலை ஏறத்தாழ சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சொல்லப்படுகிறது அரிதான இவ்விரு சிலைகளும், சுரேஷிடம் வந்தது எப்படி வந்தது ? இச்சிலைகள் எங்கிருந்து கடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. யார் மூலம் கடத்தப்பட்டது ? இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இவ்விரு சிலைகளையும் சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.






















