மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவாலங்காடு பகுதியில் கௌதமன் என்பவர் அசைவ ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு சாப்பிடுவதற்காக கடந்த 9ம்தேதி ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்துள்ளனர். எண்ணெய் ஊற்றாமல் தோசை கேட்டுள்ளனர். ஆனால் தோசையில் எண்ணெய் ஊற்றி கொடுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து உரிமையாளர் கௌதமனை கண்மூடி தனமாக தாக்கியுள்ளனர். கௌதமன் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அது தொடர்பாக கௌதமன் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர் , ராஜராஜன் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.