காஞ்சிபுரம், ஜூலை. 08 –
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், மேலும் கல்வி நிலையங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சமூக மேம்பாட்டு நலவுதவிகளை செய்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 6 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் பகுதியில் இந்நிறுவனத்தின் சார்பில் நெகிழியில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு நடை மற்றும் மிதிவண்டி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் முதன்மை செயல்பாட்டு மேலாளர் எஸ்.குமார் தலைமையிலும், உதவி மேலாளர் கருணாகரன் மற்றும் ராகுல் முன்னிலையிலும், உதவி பொறியாளர் இரா. காளிதாசன் வழி நடத்திச் செல்ல இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது நெகிழி பயன்பாட்டல், சுற்றுப்புற சூழல் மாசடைவதால் மக்களுக்கும் மற்றும் உயிரணங்களுக்கும் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக பொது மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும், பொதுமக்களுக்கு 1000 –க்கும் மேற்பட்ட பருத்தித் துணியிலான கைப்பைகளை அப்போது அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து, இயற்கை பொருட்களால் ஆன அன்றாட பயன்பாட்டிற்கான பொருட்களை மக்களுக்கு வழங்கி அதனைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அந்நிறுவனத்தின் சார்பில் தூய்மையை மேம்படுத்தும் வகையிலான கிரிமிநாசிகள், முக கவசம், சோப்பு அடங்கிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அதுப்போன்று விழுப்புரம் மாவட்டம், நெமூர் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா இரு வார விழாவின் ஒரு பகுதியாக, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அனைவரும் சுற்றப்புற தூய்மைக் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து “தூய்மை இந்தியா” குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
மாணவ, மாணவியர்களுக்கான கையெழுத்துப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் அப்பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்காக அப்பள்ளிக்கு அந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 150 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன மேலும் அப்பள்ளிக்கு தென்னை துடைப்பங்களுடன் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது.



























