காஞ்சிபுரம், ஏப். 26 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (58). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் மாமல்லபுரம் பகுதியில் பாசிமணிகளை விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் இருளர் இனத்தைச் சார்ந்த ஏழு வயது சிறுமிக்கு ரஸ்னா பாக்கெட்டை வாங்கி கொடுத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீதான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அரசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 5 -ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.