கொளப்பாக்கம், ஏப். 03 –
கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் இலவச நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல்களை அமைத்து பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். கொளப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் ஏசுபாதம் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை பார்ப்பதற்கு பழமுதிர்ச்சோலை போன்று காட்சி அளித்தது. இளநீர், தர்பூசணி, மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம், பனங்காய், கிர்ணி, வெள்ளரிக்காய் என அனைத்தும் கொலை, கொலையாக வைக்கப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கு பழ கடையை போன்று தண்ணீர் பந்தல் காட்சியளித்தது. மேலும் அங்கு வந்த பொதுமக்களுக்கு தர்பூசணி, கிர்ணி பழம் ஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். அதுமட்டுமன்றி பழங்களை அறுத்து கொடுக்காமல் முழுமையாக பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.