கும்பகோணம், ஜூன். 25 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மானம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோபுரத் தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், மானம்பாடி மெயின் ரோட்டில் உள்ள அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற வடபத்திர காளியம்மன் ஆலயம். மேலும் இவ்வாலயத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளங்குகிறார் ஸ்ரீவட பத்திர காளியம்மன்.
மேலும் இவ்வாலயத்திற்கு, கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டு, அதற்கான திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது, தொடர்ந்து 23ம் தேதி வெள்ளிக்கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசம் மற்றும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ வட பத்திர காளியம்மனுக்கு விசேஷ கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.