திருவாரூர், ஜூலை. 28 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் தென்குடி ஸ்ரீ அங்காளிபுரம் சமஸ்தானத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடத்தில் 10-ஆம் ஆண்டு ஆடி அமாவாசை பால்குடத்திருவிழா இன்று நடைபெற்றது.
அதனை முன்னிட்டு கடந்த 26/7/2022 அன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீ காமேஸ்வரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அதன் மறுதினம் கரகம் எடுத்தல் நிகழ்வும், ஸ்ரீ அங்காளம்மன் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்வும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று திருமலைராஜன் ஆற்றிலிருந்து பால்குடப்புறப்பாடு தொடங்கி ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடத்தில் உள்ள அங்காளம்மனுக்கு மகா பாலபிஷேகமும், கூழ் வார்த்தலும் மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாளை வேண்டுதல் பலிபூஜையும், ஸ்ரீஅங்காளம்மன், ஸ்ரீ பெரியாச்சி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்ப படையலும் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மெகா அன்னதானமும் நடைபெற உள்ளது.





















