கும்பகோணம், செப். 26 –
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி, குடிதண்ணீரை மூன்று மாத காலத்துக்கு மேலாக சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
முன்னதாக குடிநீர் வழங்க வேண்டி பலமுறை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உயர்மட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமலும், மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வந்ததால், இன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியில் உள்ள பெண்கள் உட்பட பெரும்பாளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று காலி குடங்களுடன் அதிமுக மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன் தலைமையில் அனைவரும் கும்பகோணம் – தஞ்சை சாலையில் அமர்ந்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து அத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்குப் பின் கும்பகோணம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இன்னும் மூன்று நாட்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.