திருவாரூர், செப். 26 –
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு சரியான திட்டமிடல் இல்லாமலும், அவசரகோலத்தில் நிரந்தர இடம் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது. இதனால் இக்கல்லூரி குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நிலை ஏற்பட்டு அப்பள்ளியில் இயங்கி வருகிறது.
மேலும் இந்த கல்லூரியில் எண்ணுருக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்லூரி வாடகைக்கு இருப்பது போல அந்த பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. எனவே தற்போதைய அரசாங்கம் உடனடியாக குடவாசல் பகுதியில் இந்த கல்லூரிக்கு உரிய இடத்தை தேர்வு செய்து கட்டிடங்களை கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும் என்றும், தற்போது தேர்வு செய்துள்ள இடம் குடவாசலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லூர் பகுதியாகும். இங்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள் கல்லூரி, வட்டம், மாவட்ட மற்றும் உயர்கல்வித்துறை நிர்வாகம் என்று அனைத்து தரப்பு பிரிவினருக்கும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் அது தொடர்பாக தொடர்ந்து இந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் விளமல் கடைத்தெருவில் இருந்து பேரணியாக மாணவர்கள் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அங்கு காவல் துறை பலத்த பாதுகாப்புடன் இருந்ததால் கேட்டில் ஏறி தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பரபரப்பு ஏற்பட்டது.























